technology

img

நாசா ராக்கெட்டில் பறக்கும் தஞ்சை கல்லூரி மாணவரின் செயற்கைக் கோள்....

தஞ்சாவூர்:
தஞ்சை கல்லூரி மாணவர் கண்டுபிடித்த சிறிய ரக செயற்கைக்கோள், அமெரிக்காவின் நாசா விண்வெளி தளத்தில் இருந்து, விண்ணில் ஏவப்பட உள்ளது.தஞ்சாவூர் கரந்தையை சேர்ந்தவர் ரியாஸ்தீன் (வயது 18),. இவர் தஞ்சை சாஸ்த்ரா கல்லூரியில், பி.டெக் மெக்கட்ரானிக்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் வடிவமைத்துள்ள சிறிய வகை செயற்கைக்கோள், வரும் 2021 ஆம் ஆண்டு நாசா விண்வெளி தளத்தில் இருந்து, ஏவப்பட உள்ளது.இதுகுறித்து மாணவர் ரியாஸ்தீன் கூறியதாவது: 

நாசா விண்வெளி மையம் மற்றும் ‘ஐ டூ லேனிங்’ அமைப்பு இணைந்து, ‘க்யூப் இன் ஸ்பேஸ்’ என்ற விண்வெளி ஆராய்ச்சி போட்டிகளை நடத்தி வருகிறது. இதில், 73 நாடுகளைச் சேர்ந்த, சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.கடந்த 2019 – 2020 ஆண்டுக்கான போட்டியில் கலந்து கொண்டு, தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு, நான் உருவாக்கிய விசன்–1 மற்றும் விசன் –2 இரண்டு செயற்கை கோள்கள் தேர்வாகியுள்ளது.இரு செயற்கைகோள்களும், 37 மில்லி மீட்டர் உயரமும், 33 கிராம் எடையும் கொண்டது. இதற்கு, ‘பெமிடோ ‘ என பெயரிடப்பட்டுள்ளது. பெமிடோ என்பது எடையில் சிறியது என பொருளாகும். இது டெக்னாலஜி எக்ஸ்பிரிமெண்ட்டல் செயற்கைக் கோள் ஆகும்.

செயற்கைக்கோள் விசன் – 1 பாலி எதரி இமைடு அல்டம் 9085, விசன்–2 பாலி எதரி இமைடு அல்டம் 1010, என்று சொல்லக் கூடிய தெர்மோ பிளாஸ்டிக் மூலம் 3டி பிரிண்டிங் தொழில்நுட்பத்தை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கு தேவையான, மின் சக்தியை, செயற்கைக் கோளின் மேற்புறத்தில் உள்ள, சோலார் செல்களில் இருந்து பெற முடியும். இதில், 11 சென்சார் பொருத்தப்பட்டு இருப்பதால், விண்வெளியில் இருந்து, பல வகையாக தகவல்களை அறியலாம். ராக்கெட்டில் ஏற்படும் காஸ்மிக் கதிர்களின் தன்மை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

நாசா மூலம் விண்வெளியில் செலுத்த, விசன் –1 கருவி தேர்வு செய்யப்பட்டுள்ளது. 2021 ஜூன் மாதம், நாசா விண்வெளி தளத்தில் இருந்து, எஸ்.ஆர்.- 7 ராக்கெட் மூலம், செயற்கைக் கோள் ஏவப்படுகிறது. இதை போன்று விசன்–2 செயற்கைகோள் ஆர்.பி–6 என்கிற ஆராய்ச்சி பலூனில் பறக்க விடப்படுகிறது. நான் பள்ளி இறுதியாண்டில் இருந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறேன். இவ்வாறு தெரிவித்தார்.